இன்று காலை திருக்குறளின் மூலம் தேடப்போய் மேலோட்டமாக ஒரு முறை வாசித்து விட்டு, அப்படியே சமண சமயம் பற்றியெல்லாம் நூல் நூலாய் வாசித்து தீர்த்தங்கரர், திகம்பரர், சமணர்களின் அறங்கள் குறித்தெல்லாம் ஏறத்தாழ இருநூறு பக்கங்கள் வாசித்திருப்பேன் என்று நினைக்கிறேன். இதை, ஒரு பதிவாக எழுதிப் பகிரும் திட்டம் இருக்கிறது.
ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பில் படிக்கும் காலத்தில் திருக்குறள் போட்டிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு மாநில அளவில் வென்றிருக்கிறேன். என்னை வகுப்பிலிருந்து போட்டிகளுக்கு அழைத்துச் செல்லவே வாரம் ஒரு திட்டம் போடப்படும். மனனம் என்றால் அப்படி ஒரு மனனம். அதிகாரத் தலைப்பு சொன்னால் பத்து குறளையும் சொல்லிவிடுவேன். தனித்த சொற்கள் சொன்னால் அந்தச்சொற்கள் வரும் குறளை எல்லாம் சொல்லிவிடுவேன். குறளின் எண் சொன்னால் குறளைச் சொல்லிவிடுவேன். ஆனால் இப்பொழுது அத்தகைய பலம் இருக்கிறதா என்று தெரியவில்லை. அல்லது, இப்பொழுது வேறு பலம் கூடிவிட்டது. நிறைய புதிய புதிய தமிழ்ச் சொற்களை, சொற்களின் வேர்களை அறியும் ஆர்வம் மேலோங்கி தமிழ் இன்னும் தீராத ஊற்றாகவே இருக்கிறது.
விடயத்திற்கு வருவோம். வடக்கிலிருந்து தெற்கு நோக்கி சமணம் பரவியதும், இங்கே வேரூன்றியதும் குறித்த ஆய்வையெல்லாம் வாசித்து சமணத்தை ஒரு வட்டமடித்தேன். பின் இலக்கியங்களில் சமணம் ஆளப்பட்ட ஆய்வுகளையும் மேற்கோள்களையும் அறிந்து ஒரு யூ வளைவு எடுத்தால், மாலையில் அன்பகத்தில் சமூகநீதிப் பேராசிரியர்கள் க. நெடுஞ்செழியன் மற்றும் சக்குபாய் அவர்கள் எழுதிய ஆசீவகமும் அய்யனார் நூல் வெளியீட்டு விழாவில், ஆ ராசா அவர்கள் ஆசீவகம் குறித்த கருத்துகளை எல்லாம் எடுத்துவைத்து தமிழர்களின் தத்துவ சிந்தனை நெறி குறித்த ஓர் அருமையான உரையாற்ற, க. நெடுஞ்செழியன் அவர்கள், இலக்கியங்கள் எல்லாவற்றையும் சமணமயமாக்கிய ஆய்வுகளுக்கிடையே தமிழர்களுக்கு என்று ஒரு தத்துவ சிந்தனை மரபு ஒன்று இருந்திருக்கவேண்டுமே என்று நாம் செய்த ஆய்வின் விளைச்சல் தான் ஆசிவகம் என்கிறார். முற்றிலும் வேறு திசையில் வேகம் எடுத்தது போல் இருக்கிறது. இப்பொழுது, ஆசீவகமும் அய்யனாரும் அறிந்து கொள்ளும் ஆவலில் இருக்கிறேன். ஏதோ 2500 ஆண்டு கால கால இயந்திரத்தில் ஏறியது போன்ற ஒரு மனநிலை இன்று.

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.
Enquiries welcome for poetry, translations, film, and literary events.
Site: Kutti Revathi